Archives: செப்டம்பர் 2024

கிறிஸ்துவில் கட்டப்பட்டது

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், டெல்லியில் உள்ள செங்கோட்டை, மைசூரில் உள்ள அரச அரண்மனை, மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில்கள் அனைத்தும் புகழ்பெற்ற பெயர்களைக் கொண்டுள்ளன. சிலவைகள் பளிங்குக் கற்களால் ஆனவை; சிலவைகள் சிவப்புக் கல்லால் ஆனவை; சிலவைகள் பாறைகளால் வெட்டப்பட்டவை; மற்றவை தங்கத்தால் பதிக்கப்பட்டவைகள். ஆனால் அவை அனைத்திற்கும் பொதுவான ஒன்று உள்ளது. அவை அனைத்தும் கட்டிடங்கள்.

கட்டடம் என்பது விசுவாசிகளைக் குறிக்க வேதம் பயன்படுத்தும் முக்கியமான உருவகங்களில் ஒன்று. “நீங்கள்... தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 3:9) என்று பவுல் அப்போஸ்தலர் எழுதுகிறார். விசுவாசிகளுக்கு வேறு பெயர்களும் உள்ளன: “மந்தை” (அப்போஸ்தலர் 20:28), “கிறிஸ்துவின் சரீரம்” (1 கொரிந்தியர் 12:27), “சகோதர சகோதரிகள்” (1 தெசலோனிக்கேயர் 2:14) மற்றும் பல.

கட்டிட உருவகம் 1 பேதுரு 2:5 இல் மீண்டும் மீண்டும் வருகிறது. பேதுரு திருச்சபையைப் பார்த்து, “ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும்... கட்டப்பட்டுவருகிறீர்கள்” என்று குறிப்பிடுகிறார். மேலும் 6ஆம் வசனத்தில் ஏசாயா 28:16 மேற்கோள் காண்பிக்கிறார், “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்.” இயேசுவே அவருடைய கட்டிடத்தின் அஸ்திபாரம்.

திருச்சபையைக் கட்டுவது நமது வேலை என்ற உணர்வு நமக்கு இருக்கலாம். ஆனால் “நான் என் சபையைக் கட்டுவேன்” என்று இயேசு சொல்லுகிறார் (மத்தேயு 16:18). நாம் நம்மை “அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு” (1 பேதுரு 2:9) தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். அந்தத் துதிகளை நாம் அறிவிக்கும்போது, அவருடைய நற்செயல்களைச் செய்யும்போது நாம் அவருடைய கரங்களில் கருவிகளாக மாறுகிறோம்.

கல்லறையில் இல்லையா?

நாட்டுப்புற இசைஞானியான ஜானி கேஷ் மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோதும், தொடர்ந்து இசையமைப்பதில் உறுதியாக இருந்தார். அவரது இறுதி ஆல்பம், “அமெரிக்கன் 6: ஐன்ட் நோ கிரேவ்,” அவரது வாழ்க்கையின் இறுதி மாதங்களில் பதிவு செய்யப்பட்டது. காஷின் ஒரு பாடலின் தலைப்புப் பாடலானது, அவர் உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கையைப் பாடுவதைக் கேட்கும்போது அவரது இறுதி எண்ணங்களைப் பற்றிய நுண்ணறிவைத் தருகிறது. அவரது புகழ்பெற்ற ஆழமான குரல், அவரது உடல்நலக் குறைவால் பலவீனமடைந்தாலும், விசுவாசத்தின் சக்திவாய்ந்த சாட்சியை அறிவிக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறு காலையில், ஜானியின் நம்பிக்கையானது வெறும் இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதில் மட்டுமில்லாமல், தன்னுடைய சரீரமும் உயிர்த்தெழும் என்பதை அவர் நம்பியிருந்தார். 

இது ஒரு முக்கியமான சத்தியம், ஏனென்றால் அப்போஸ்தலனாகிய பவுலின் நாட்களில் கூட, மக்கள் மரணத்திற்கு பின்னான உயிர்தெழுதல் என்னும் நம்பிக்கையை மறுதலித்தனர். பவுல் அவர்களின் வாதத்தை கடுமையாக விமர்சித்தார், “மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா” (1 கொரிந்தியர் 15:13-14).

இயேசுவின் சரீரத்தை கல்லறையால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பதுபோல், அவர் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிற அனைவரும் ஒரு நாள் “உயிர்பிக்கப்படுவார்கள்" (வச. 22). மேலும் உயிர்த்தெழுந்த சரீரத்தோடு ஒரு புதிய பூமியில் அவருடன் நித்தியத்தை அனுபவித்து மகிழ்வோம். அதுவே நம்முடைய துதிகளுக்கான காரணம்!

நல்ல பிரியாணி

வர்ஷாவின் உணவுக் கடையில் அதிகம் விற்பனையாகும் உணவு அவரது பிரியாணிதான். அவள் வெங்காயத்தை பொன் நிறமாக மாறும் வரை கவனமாக வறுத்தெடுப்பாள். எனவே, வழக்கமான வாடிக்கையாளர் ஒருவர், “உங்கள் பிரியாணி சுவை வித்தியாசமானது. சுவை மேம்பட்டதாக தெரியவில்லை" என்றார். 

வர்ஷாவின் புதிய உதவியாளர், இந்த முறை அதைத் தயாரித்து, அது ஏன் வித்தியாசமானது என்பதை விளக்கினார்: “வழக்கமான முறையில் நான் வெங்காயத்தை வறுக்கவில்லை, ஏனென்றால் நான் அதை வீட்டில் அவ்வாறு செய்வது வழக்கம். மிளகாய் தூளும் அதிகம் சேர்த்தேன். என் கருத்துப்படி, அது நன்றாக சுவைக்கிறது.” செய்முறை வழக்கத்தைப் புறக்கணித்துவிட்டு, அதற்குப் பதிலாக அதை தன்னுடைய பாணியில் அவள் செய்து காண்பித்தாள். 

நான் சில சமயங்களில் தேவனுடைய ஆலோசனைகளுக்கு இப்படித்தான் பதிலளிப்பேன். வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள அவருடைய கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, நான் என் கருத்துக்களுக்கு உட்பட்டு என் வழியில் செல்கிறேன்.

சீரிய இராணுவத்தின் படைத்தளபதியான நாகமானும் இதேபோன்ற தவறை செய்யும் விளிம்பில் இருந்தான். தன் தொழுநோய் குணமாக யோர்தானில் தன்னைக் கழுவும்படி எலிசா தீர்க்கதரிசி மூலம் தேவனுடைய அறிவுறுத்தலைப் பெற்றபோது, பெருமிதம் கொண்ட படைவீரன் கோபமடைந்தான். தேவனுடைய கட்டளையை விட அவனது சுயகருத்து மேலானது என்று நம்பி, தனது தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கான தனது சொந்த எதிர்பார்ப்புகளை அவன் பேசினான் (2 இராஜாக்கள் 5:11-12). இருப்பினும், எலிசாவின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கும்படி அவனுடைய ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தினர் (வச. 13). இதன் விளைவாக, நாகமான் குணமடைந்தான்.

நாம் தேவனுடைய வழியில் விஷயங்களைச் செய்யும்போது, விவரிக்க முடியாத சமாதானத்தை அனுபவிக்கிறோம். அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவருடன் இணைந்து பணியாற்றுவோம்.

இராஜ்ய வடிவ பணித்தளம்

விக்டோரியன் இங்கிலாந்தின் தொழிற்சாலைகள் இருண்ட இடங்களாக இருந்தன. இறப்புகள் அதிகமாக நிகழ்ந்தன. தொழிலாளர்கள் பெரும்பாலும் வறுமையில் வாழ்ந்தனர். “சேரியில் வசிக்கும் உழைக்கும் வர்க்கம் எவ்வாறு இலட்சியங்களை வளர்த்துக் கொள்ள முடியும்," என்று எண்ணிய ஜார்ஜ் கேட்பரி, தனது விரிவடையும் சாக்லேட் வணிகத்திற்காக ஒரு புதிய வகையான தொழிற்சாலையை உருவாக்கினார். அது அவரது தொழிலாளர்களுக்கு பெருமளவில் பயனளித்தது.

இதன் விளைவாக, முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட போர்ன்வில்லே என்ற அந்த குக்கிராமம், விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள் மற்றும் கேட்பரியின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான தேவாலயங்கள் என்று வடிவமைக்கப்பட்டது. அவர்களுக்கு நல்ல ஊதியமும் மருத்துவ சேவையும் வழங்கப்பட்டது. இவை அனைத்திற்கும் கேட்பரி கிறிஸ்துவின் மீது வைத்த நம்பிக்கையே காரணம். 

தேவனுடைய சித்தம் “பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று இயேசு ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கிறார் (மத்தேயு 6:10). காட்பரி செய்தது போல், இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தின் அடிப்படையில், நம்முடைய பணியிடங்கள் அன்றன்றுள்ள ஆகாரத்தை சம்பாதிக்கும் இடமாகவும் கடனாளிகளை மன்னிக்கிற இடமாகவும் இருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க உதவுகிறது (வச. 11-12). ஒரு வேலையாளுக்கு, “கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து” (கொலேசெயர் 3:23) வேலை செய்ய ஊக்குவிக்கிறது. முதலாளிகளாக, ஊழியர்களுக்கு “வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்ய” (4:1) ஊக்குவிக்கிறது. நமது பங்கு எதுவாக இருந்தாலும், ஊதியமாக இருந்தாலும் சரி, தன்னார்வமாக இருந்தாலும் சரி, நாம் சேவை செய்பவர்களின் நல்வாழ்வைக் கவனிப்பதைக் குறிக்கிறது.

ஜார்ஜ் கேட்பரியைப் போலவே, தேவன் நம் சுற்றுப்புறங்களுக்கும் பணியிடங்களுக்கும் பொறுப்பாக இருந்தால், விஷயங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கும் என்று கற்பனை செய்யலாம். ஏனெனில் அவர் இருக்கும் போது மக்கள் செழித்து வளர்கிறார்கள்.

மீட்டெடுக்கும் பயிற்சி

நீங்கள் எப்போதாவது ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அதை இடையில் நிறுத்திவிட்டு, அது எப்போது நிகழ்ந்தது அல்லது யார் என்று குழம்பி யோசித்திருக்கிறீர்களா? காலப்போக்கில் நினைவாற்றல் மங்கிவிடும் என்று நாம் அடிக்கடி நம்புகிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அந்த கருத்தை ஆதரிக்கவில்லை. உண்மையில், அவை நமது நினைவாற்றல் பிரச்சனையல்ல என்பதைக் குறிப்பிடுகின்றன. அந்த நினைவுகளை மீட்டெடுப்பது நமது திறமை என்று கருதுகின்றன. நினைவுகளை சில வழக்கமான ஒத்திகை இல்லாமல் அணுகுவது கடினமாகிவிடும்.

அந்த மீட்டெடுப்பு திறனை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று, வழக்கமான திட்டமிடப்பட்ட செயல்கள் அல்லது குறிப்பிட்ட நினைவகத்தை நினைவுபடுத்தும் அனுபவங்கள். நமது சிருஷ்டிக்கர்த்தர் இதை அறிந்திருந்தார். எனவே அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு வாரத்தில் ஒரு நாளை தேவனை ஆராதிக்கும் ஓய்வுநாளாக ஏற்படுத்தியிருந்தார். அத்தகைய ஓய்வினிமித்தம் நாம் மனப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெறுகிறோம். “கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி(னார்)” (யாத்திராகமம் 20:11). இது நம்மால் உண்டானது அல்ல; தேவனுடைய திட்டம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். 

நம் வாழ்க்கையின் அவசரத்தில், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் என்ன செய்திருக்கிறார் என்ற நினைவுகளில் சில நேரங்களில் நம் பிடியை நாம் இழக்க நேரிடுகிறது. நம் வாழ்க்கையை யார் உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள் என்பதையும், நாம் அதிகமாகவும் தனிமையாகவும் உணரும்போது அவர் நம்மோடு இருப்பதாக வாக்களித்ததை நாம் மறந்துவிடுகிறோம். நம்முடைய வழக்கமான வாழ்க்கைப் பயணத்திலிருந்து ஒரு நாளை ஓய்வுநாளாய் ஆசரிப்பதின் மூலம் நாம் தேவனையும் “அவர் செய்த சகல உபகாரங்களையும்” (சங்கீதம் 103:2) நினைவுகூர வலியுறுத்தப்படுகிறோம்.